திருநங்கை - மாற்றத்தை நோக்கி !!


ஆணென்றால் வீரமும் பெண் என்றல் வெட்கமும் அதனதன் இலக்கணமே 
சிவனில் பாதியும் உமையாள் ஒரு பாதியும் கலந்து ஒரு அர்த்தமாய் நின்றால் "அர்த்தநாரீஸ்வரன்" என்றோம்...


ஆண்மையில் ஒரு பாதியும் பெண்மையில் சரி மீதியும் ஒரே உயிராய்,உணர்வாய் நின்றவரை ஏதேதோ  பெயர்கள் சொல்லி ஏளனம் செய்தோம் - நியாயம் தானா??

அவர்கள் இலக்கணம் இல்லாத இனத்தவர் அல்ல,இலக்கியத்திலும் துணையாய் நின்றவர்கள்
ஆண்பால் பெண்பால் என இரண்டும் கலந்தாலும் அவர்கள் ஏங்குவது உண்மையான அன்பிற்காக!

வீதியில் நடமாடும் அவர்களை முதுகின் பின் வாய் கூசும் ஈட்டிகளை (வார்த்தைகள்) வீசி அவர்கள் மனதை துளைப்பது தானோ நீ குடித்த தாய்பாலின் திண்மை?
கடவுளில் ஆண்-பெண் கலவையை மதிக்கும் மனிதன் இவர்களை ஒதுக்குவது ஏனோ?

மன்மதன் ஆண் தன்மை இழந்து பெண்தன்மை பெற்று "பேடிக் கூத்து" ஆடிய கதைகளமும் உண்டு!
மன்னர்கள் காலத்தில் "ஆரிய பேடிகள்" சேவகமும்,சிலர் அந்தபுரதிலும் இருந்த சுவடுகள் காலம் பதித்த ஏடுகள் சொல்லும்!!

நங்கைக்குள்ளே "திரு" (வீரம்) என்னும் மாற்றம் கண்டால் அவள் "திருநங்கை" ஆகிறாள்!
ஆடவனுள்ளே நங்கைக்கான நாணம் உட்புகுந்தால் அவன் "அரவான்" ஆகிறான் - எவ்வகை மாற்றம் காண்பினும் அவனும் அவளும் மனித இனமே!!



பாலினத்தால் வேறுபட்டாலும் உணர்வுகள்,உரிமைகள்,உறவுகள் ஒன்றல்லோ?
உறவுகளால் ஒதுக்கப்பட்ட உயிர்களுக்கெல்லாம் உலகமே வனவாசமே!!


உணர்வால்,இனத்தால் தீண்டல் கண்ட அவர்களின் உடலையும் தீண்ட திரியும் மனிதா மீண்டும் உன் நிலை மறந்து விலங்கினம் ஆனாயோ?



மழை இனம் பார்த்து பொழிவதில்லை,வானம்,பூமி,சாலை,பூக்கள்,கடவுள் இவையெல்லாம் ஓரவஞ்சனை செய்வதில்லை மனிதன் போல இனம் பார்த்து அன்பை பொழிவது!!

ஒரு நாள் திருமணம் செய்து மறுநாள் விதவையாகும் அவர்கள் சடங்கு கேளிக்கை அல்ல - பல வருடம் வாழ்ந்து,வாழ்க்கை கசந்து அத்துணை  நாட்களின் அடையாளமும் ஒரு காகிதமாய் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கும் விவாகரத்து வழக்குகளை ஒப்பிட்டு பார்!

அவர்களுக்கென ஒருஉலகம்,கடவுள்,சடங்கு,திருவிழா என வாழும் அவர்கள் வாழ்வில் உன்னிடம் அவர்கள் கேட்பது தங்களுக்கான சுய-மரியாதை,கலப்படமற்ற அன்பு,திடமான நட்பு,ஒதுக்காத சமுகம்,உடல் தீண்டா பார்வை,உள்ளம் தீண்டா வார்த்தைகள் மட்டுமே!!

இவர்களுக்கும் காதலுண்டு - அக்காதலுகுள்ளும் ஒரு உணர்வுண்டு - உணர்வுக்கும் ஒரு மரியாதை செய் !!

ஏதொரு சமயமும் இவர்களை ஒதுக்கியதில்லை - சமயத்தை உருவாக்கிய மனிதனை தவிர!!

சேர்ந்து நடக்க முடியாதென்றால் வழிவிட்டு செல் - அவர்களிலும் உழைப்பாளியும் உண்டு போராளியும் உண்டு!!
தூக்கி எரியும் காகிதமல்ல அவர்கள் - நாமறியா மொழியில்,வலியால் எழுதபட்டிருக்கும் கவிதைகள்!

அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ அனுமதிப்போம் - அவர்களுக்கான உரிமைகளோடு !!


குறிப்பு :
பாரத போரிலே வெற்றி காண காளிக்கு பலியிடப்பட்டவன் "அரவான்"- அவனது ஆசைக்காக மோகினி வேடம் பூண்டு வந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.ஒருநாள் இரவு அவனுடன்,மறுநாள் அவன் பலி இட்ட பிறகு விதவை கோலம் கொள்கிறாள்..இதுவே கூவாகம் - கூத்தாண்டவர் கோவிலில் கடைபிடிக்கப்படும் சம்ப்ரதாயம்!!!

-அஜய் ரிஹான் 

கருத்துகள்