ஆவாரம் பூ [பாகம் 2]


மண்ணில் விழுந்த மழைத்துளியின் வாசம் போலே அவனை தாக்கியது அவளது சுவாசம்..
கிட்டத்தட்ட பேச்சு மூச்சு இல்லா மயக்க நிலை!!
மீண்டும் பேச்சி அவனிடம் ஏலே முத்து பால் கொண்டாரியா? எனக் கேட்க,
மின்னல் தாகிய மரம் போலே சுயநினைவு பெற்று உள்ளே போனான் முத்தையன் !!

இந்தாபுள்ள என நீட்டினான்...துட்டு எங்கப்புள்ள ? என்றான்...அவளோ ஆத்தா தரும் எனச்சொல்லி
புன்னகையை இவனுக்கு தந்து வீடு  நோக்கி பறந்தாள்!!

தினவெடுத்த தோள்கள் இரண்டும்,லாடம் கட்டிய கால்கள் எட்டும் கொண்ட காளை வண்டியில்
மனதில் இரக்க குணமும்,கைகளில் தங்கக்காப்பும்,ஒற்றைக்காதில் கடுக்கனும்,புடைத்த வயிறோடும்,தங்கச் சங்கிலிகள் மார்பில் தவழ!

உடம்போடு ஒட்டிய சந்தனமும்,தொந்தியைச் சுற்றிய வெட்டியும்,மந்திரித்து கட்டிய புலிப்பல்லும்,நெற்றியில் சிவநாமமும் பரவ குலுங்கிக்குலுங்கி வந்தான் பண்ணையகார வடிவேலன்!!



முத்தையன் பள்ளிகூட செலவுக்கு வாங்கிய துட்டுக்கு வட்டி கட்ட பண்ணையக்காரர் வீட்டுத் திண்ணையில் கருவாச்சி கூடை இறக்கி,சும்மாடினால் தரைதுடைத்து அவள் அமர்ந்த வேளை,
கழுத்தில் ஆடும் மணியோசையோடு ஆடி அசைந்து வந்து சேர்ந்தது வடிவேலனின் காளைகள்!!

என்ன கருவாச்சி,புள்ள பள்ளிகொடம் போறானா? எதுக்கு புள்ள உனக்கு தேவையில்லாத செலவு?
உடம்பு சொகம்மில வேற ஒனக்கு..உம்புள்ளைய பண்ணைக்கு
கொண்ணந்து வுடு என்றான் பண்ணை!!

இல்லீங்க சாமி,வரவு செலவு தெரிஞ்சுகவாவது படிக்கோனும்மில்லீங்களா!
அதுக்குதேன் அனுப்புறேன்.படிக்கட்டும் என் ஒடம்புல தெம்பு உள்ளந்தன்டி ஓடி உழச்சாகனும் இல்லீங்களா என்றாள் கருவாச்சி தொலைநோக்கோடு !!

சரி,என்ன இம்புட்டு தொலைவு? என்ன விஷயம் என்றான் வடிவேலன்..வட்டிக்காசு கொண்டாந்தேன் என்றாள் பவ்வியமாக.
கேழ்வரகு கொஞ்சம் தாரேன் வாங்கிகிட்டு போ என்றான் வடிவேலன்.வாங்கிக் கூடையில் வைத்து குடிசையை பார்த்து நடந்தாள் கருவாச்சி!!




இருள் சூழ்ந்த நேரம் தன் குடிசையினுள் கருவாச்சி நுழைய
மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் முத்தையன் வீட்டுப்பாடத்தை தன் கரும்பலகையில் எழுதி முடித்திருந்தான் - அவனை ஒருமுறை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள் -ஒருவித பெருமையோடு!!

பேச்சி வீட்டு வாசலில்
கிழவிகள் இரண்டும்,பொன்னுத்தாயின் நாத்தனாரும் அக்கம்பக்கம் புரணி பேசி,சிலரை வசை பாடி முடித்து,அவரவர் குடிசை பார்த்து கிளம்பிய நேரம்! பேச்சி பாத்திரமெல்லாம் வெலக்கி வைத்து அடுப்பங்கரை
விட்டு வெளியே வந்தாள்!!

மிஞ்சிய பாலை ஒரையுற்றி ,கட்டாந்தரையில் பாய் விரித்து விட்டத்தை பார்த்து கண்ணயர்ந்த போது
அவள் வீட்டுக் கோழி,மாடெல்லாம் ஒருஞ்சாமம் தூங்கியே இருந்தது !!



பேச்சி மட்டும் தூங்காமல் அந்த இருட்டிலும் கன்னமெல்லாம் சிவக்க விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்...ஏண்டி ராசாத்தி இந்த ராவுல அழுவுது ? என வாஞ்சையாக பேச்சியை சமாதானப்படுத்த முயன்றாள் பொன்னுதாயி...!


அடுத்த வாரம்முத்தாலம்மன் கோயில் திருவிழா எனக்கு பொற்கொடிக்கு
( பொன்னுத்தாயின் நாத்தனார் மகள் ) வாங்கியந்த மாதிரியே துணி வேணும் என அடம் பிடித்தாள்..ஆத்தா அறுவடை முடிஞ்சதும் வாங்கியாறேன் என் கண்ணு இலே இப்போ தூங்குவியாம் எனச் சொல்லி அவளை தூங்க வைத்தாள்!!



அறுவடைத் திருநாள்
கதிர் அருவாளெல்லாம் குளித்து முடித்து பட்டை பூசி,நடுவே சந்தன குங்குமம் அமர்ந்திருக்க,!
காணக்கிடைக்காத அதிசயமாய் இன்று மட்டுமே தன்னைச் சுற்றி வரும் ஊதுவத்தியை மதிமயங்கி பார்த்திருக்க..!!

சேவல் கூவும் முன்னே எழுந்து,மண்தரையில் சாணம் மொழுகி,எட்டு புள்ளி கோலம் போட்டு,நெற்றி எல்லாம் ரூவா அகல குங்குமப் பொட்டு வைத்து,கட்டி வைத்த கனகாம்பரத்தில் கொஞ்சம் சுவரோடு ஒட்டி இருக்கும் சாமிக்கும்,மீதி தன் வளைந்து சுருண்டு இருக்கும் கொண்டைக்கும் வைத்து கிளம்பினாள் பொன்னுத்தாயி!!

வழியில் கருவாச்சியும் கூடையும் கையுமாய் வந்து சேர்ந்தாள்!! - கிள்ளி வைத்திருந்த பூவை கருவாச்சிக்கு கொடுத்தாள்!!!

அறுவடையும் திருவிழாவும் தொடரும்!!!

கருத்துகள்