ஆவாரம் பூ [பாகம் 3]



வயது வந்த கன்னியை போல வெட்கி நிக்கும் கதிரெல்லாம்
தன்னை தொட்டுச்செல்லும் காற்றோடு கதை பேசிக்கொண்டிருக்கும் தருணம்!!

வயக்காட்டின் வரப்போரம் கூடி நின்ற பெண்கள் - ஒன்றுகூடி கொலவைச் சத்தம் போட
தன் பூசைக்கான நேரம் பார்த்து வந்து நின்றான் வானத்தில் கதிரவன்!!

வெள்ளாமையை கணக்கு பார்க்க பண்ணையாரும் அவனது கைத்தடி சுப்பனும் வந்து சேர்ந்தனர்.


தட்டில் சூடம் அனல்லடிக்க இன்னொரு கையில் கிணிங் கிணிங் என மணி அடிக்க,கதிரவனை பார்த்து மூன்று முறை சுற்றி முடித்து "ஆத்தா மகமாயி,முத்தாலம்மா வெள்ளாம நல்லா வரோணும்,சாதி சனமெல்லாம் நல்லா இருக்கோணும் " என சொல்லி பவ்வியமாய் தட்டை பண்ணையிடம் நீட்டினான் பூசாரி..!!

சுற்றி நின்ற பெண்கள் எல்லாம் பூசாரி குடுத்த விபூதி,செவப்பு வாங்கி வெச்சுக்கிட்டு நிலத்தில் அறுவடை தொங்க ஆயுத்தமானர்கள்..!!

வடிவேலன் தன் இரு கை உயர பரப்பி "ம்ம்..ஆகட்டும் வேலையை ஆரம்பிங்க
பொழுது சாயறதுக்குள்ள  நெல்லெல்லாம் மூட்டை கட்டியகனுமுன்னு" சொல்லிபுட்டு சுப்பன் மரநிழலில் போட்டிருந்த கயத்துக்கட்டில்லில் போய் உட்கார்ந்தான்!!

சூரியன் உச்சிப்பொழுதை எட்டி இருந்த வேளை!!
கூன் விழுந்த இளம் பெண்ணை போலே வளைந்து வலதும் இடதுமாக மாறி மாறி கதிரருவாளால்  கதிர்களை அறுத்து கட்டுக்கட்டாக அடுக்கிகொண்டிருந்தாள் பொன்னுத்தாயும்,கருவாச்சியும்!!



இந்த சுப்பனோ மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்த தூக்குச் சட்டியில் வாசனை பிடித்துக்கொண்டு திரிந்திருந்தான் !!

கருவாச்சியும்,பொன்னுத்தாயும் வயப்போரம் ஓடும் நீரோடையில் கைக்கழுவி தூக்குச்சட்டியோடு மரநிழலில் அமர்ந்தனர்..ஆனால் பொன்னுத்தாயி மட்டும் கவலை பரவிய முகத்தோடு....!!

இந்தா புள்ள..இன்னா சேதி..இம்புட்டு கவலை உனக்கு என ஆரம்பித்தாள் கருவாச்சி.சிறிது நேரஅமைதிக்குப்பின் "இந்த பேச்சி புள்ள புதுத்துணி வேணுமுன்னு கெடயா கெடக்குது..பள்ளிக்கூடத்துல மதிய சோறு தின்னுச்சா தெரியல..மனசு கெடந்து தவிக்குது" என தன் கவலையை கொட்டித் தீர்த்தாள்!!

விடு புள்ள,சாயங்காலம் சாமி கூலி குடுத்த பொறவு நான் கொஞ்சம் காசு தாரேன்,மவளுக்கு துணி வாங்கிகிட்டு போவியாம்..பாவம் பேச்சி பொக்குனு போயிருவா என சொல்லி ஆறுதல் சொன்னாள் கருவாச்சி!!

மறையலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் கன்னம் சிவந்த சூரியன் மாலை பொழுதை அடைந்த வேளை!
மாட்டுவண்டியில் ஏற்றிய நெல் மூட்டையெல்லாம் பண்ணையாரின் வீட்டை நோக்கிச் செல்ல!
வரிசையில் நின்று சிந்திய வியர்வைக்கெல்லாம் கூலியாய் இரண்டேமுக்கால் ரூவாயும்,இரண்டு ஆழாக்கு கம்பும் வாங்கிக்கொண்டு இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்!!

போகும் வழியில் தினச்சந்தையில்
கருவாச்சி ஒரு கடையில் நீலநிறத்தில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கி பொன்னுத்தாயின் கூடையில் வைத்தாள்,முத்தையனுக்கு கொஞ்சம் குச்சி முட்டாயும்,சீனிச் சேவும்  வீட்டிற்கு சிமினி விளக்கு ஒன்றும் வாங்கிக் கொண்டு நடையை கட்டினாள்!!

பேச்சி குடிசையின் வாசலில் பொன்னுத்தாயின் வருகைக்காக காத்திருக்க
உள்ளே நுழைந்தவுடன் குடையிலிருந்த பட்டுபாவடையை காட்ட ஆயிரம் பாவனை காட்டி ஒரே நாளில் தேய்பிறை எல்லாம் கடந்து வளர்ந்த முழு மதியை போலே துள்ளிக்குதித்தாள் பேச்சி!!

திருவிழா முதல்நாளன்று
சாணம் போட்டு தரையெல்லாம் மொழுகி,குடிசையில் சிலப்பக்கம் காவி பூசி,
போட்டு வாய்த்த முள்ளப்பாரி எல்லாம் திருவிழா காண எழுந்து நின்றிருந்தது!!

குடிசை தொடங்கி காரைவீடு வரை நெலவுகால் எல்லாம் மஞ்சள் பூசி,செகப்பு வைத்து நடுவே கொஞ்சம் மாவிலையும் சொருகி,வாசலில் எட்டு புள்ளிக்கோலமெல்லாம் போயி பதினாறு புள்ளிக்கோலம் போட்டு வண்ணம் தூவி திருவிழா காண தயாரானது முத்துமலை கிராமம்!!

பேச்சி வானவேடிக்கையை புருவம் உயர ரசித்திருக்க..முத்தையன் உலகத்தின் எட்டாவது அதிசயம் தன் அருகில் நின்று சிரிக்கும் அழகை இந்த உலகம் மறந்து ரசித்து மெய்மறந்து நின்றான் !!



அதிகாலை கோயில் ஒலிப்பெருக்கியில் அம்மன் பாடல்கள் பாட!
ஒருபுறம் பட்டியில் நேந்து விட்ட ஆடுகளும்,கோழிகளும்,தங்கள் இறுதி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் சமயம் !
வீட்டுப் பெண்கள் எல்லாம் ஊதாங்குழலில் ஊதி ஊதி சுடுதண்ணி போட்டு கணவன்,குழந்தைகளை எழுப்பிக்கொண்டிருக்க,
கோயில் ஒட்டிய மண்டபத்தில் சமையகாரன் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்க,
இத்தனை சத்தத்தில் இன்றைய நாயகி முத்தாலம்மனும் விழித்திருந்தாள்!!

கருவாச்சி ஈரம் சொட்டும் தலையோடு முத்தையனை எழுப்பி காய்ச்சிய எண்ணெய்தேய்த்து குளிப்பாட்டி புதுத்துணி போட்டு தலைசீவி,சிங்காரம் செய்து கொண்டிருக்கும் போதே
அங்கு
பேச்சி பட்டுப்பாவாடை மினுமினுக்க இரவு விட்டுச்சென்ற நட்சத்திரம் போல ஜொலிக்க,காதில் நடனம் ஆடும் ஜிம்மிக்கியும் போட்டு,இரட்டைஜடையோடு கண்ணாடி முன் நின்றுகொண்டிருந்தாள்!

பொற்கொடி வந்து சேர,அவளிடம் தன் புதுத்துணியை காட்டி மகிழ்ந்தாள் பேச்சி!!

முதல்கால பூஜையில்
பால்,தயிர்,சந்தனம்,பன்னீரில் நீராடி பச்சை பட்டுப்புடவையில் முத்தாலம்மன் வீற்றிருக்க,கையில் கரும்பும்,ஆயுதமும் ஏந்தி இருக்க,முகமெல்லாம் கருணை வடிய,வேண்டியன் வேண்டியதெல்லாம் வரமாய் தந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்!!


சாமியாடி அருள் வந்து நாக்கை துருத்திக்கொண்டு
பட்டியில் இருந்த ஆடு,கோழியின் வேண்டுதலை எல்லாம் பொய்யாக்கிக் கொண்டிருந்தான்,
அந்த சமயம்
பேச்சி,கருவாச்சி,முத்தையன்,பொன்னுத்தாயி,பொற்கொடி முதலானோர் கோயிலை வந்தடைய....!! இதுவரை கண்டிராத இச்செயலை பார்த்து பயந்தும்,திகைத்தும் போனாள் பேச்சி !!

இடித்து வைத்த மாவிளக்கை அம்மனிடம் வைத்து வேண்டிக்கொண்டிருக்க....பேச்சியின்
எண்ணம் எல்லாம் ஆட்டுக்குட்டியை சுற்றி இருந்தது!!


பொன்னுத்தாயிடம் பேச்சி.."ஆத்தா இந்த ஆடுக்குட்டியெல்லாம் பாவம் இல்லீயா!! அதுவும் ஒரு உசுரு தானே?,ஒரு உசுரக்கொன்னு சாமிய கும்படனுமா ? நம்மள காப்பாத்துற சாமி இத ஏன் காப்பாத்தல?"
எனக் கேக்க இதை கேட்ட பொன்னுத்தாயி உறைஞ்சு போயிருந்தா!!
 எல்லா உயிரும் சமம் தானே!! - ஆனால் மவளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விக்கித்து நின்றாள் பொன்னுத்தாயி!!

இதைக் கேட்ட சாமியாடிக்கு ஆத்தா மலையேறி இருந்தாள்!!


கருத்துகள்