கலா(ம்) அஞ்சலி


ஓராண்டு கடந்து விட்டது நீர் இவ்வுலகை விட்டுச் சென்று 
சென்றது உம் உடல் மட்டுமே, உம் சாதனைகளும், நினைவுகளும் எங்கள் நெஞ்சோடு!!


இந்திய நாடு கண்ட செல்லப் பிள்ளை நீ தானே அதனாலே மண்ணின் மைந்தன் ஆனீரோ!
உம் சாதனை அனைத்தும் விண்ணை பிளந்து சென்றது - மண்ணில் இடம் இல்லாததால்!!

வறுமையாய் பிறத்தல் தவறில்லை, ஆனால் வறுமையிலேயே இறப்பது தவறென்று உம் வரலாறு புகத்தியதோர் நல்லுரை!
இளமைக் காலத்திலேயே நீர் உம் உழைப்பினால் கல்வி கற்றது எங்களுக்கு உணர்த்தியது "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே "

எங்களை "கனவு காணுங்கள்" என்ற ஒரே சொல்லில் உம் வசமாக்கிய உங்கள் குரலின் நம்பிக்கையில் வாழ்கிறோம் - கனவு காண்கிறோம்!
வள்ளுவனின் மீது அளவற்ற அன்பு கொண்டீரே - பேசும் இடமெல்லாம் அவன் குறள் கூறி நன்னெறி செய்தீரே!!

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" - பூங்குன்றனாரின் புறநானூறு வாசகம் பேசி தமிழ் மொழிக்கோர் மகுடம் சூட்டியது உம் ஐரோப்பிய பாராளுமன்ற மேடை பேச்சு!

தமிழ்நாட்டின் குடிமகனாக பதவி உம்மை தேடி வரும் முன்னே "பாரத ரத்னா"
பெற்ற தமிழ் மகன் நீர் ஒருவரே!
மாணவ, மாணவியர் உம் மீது பேரன்பு கொண்டனர் - ஒரு ஆசானாய், வழிகாட்டியாய், ஒளிச்சுடராய் நீர் அவர்கள் மீது கொண்ட அன்பால்!

விருதுகள் விரும்பி உம்மை அடைந்தது, பதக்கங்கள், பதவிகள் ஏதும் நீர் தேடிச் சென்றதில்லை! - உம் எண்ணங்கள் போலே ஏவுகணைகளும் விண்ணில் தடையின்றி பாய்ந்தது சாதனைகளாய்!!

விரும்பியவாறு மரணம் யாருக்கும் அமைவதில்லை, ஆனால் உம் மரணம் அதை பொய்யாக்கியது ! - ஷில்லாங்கில் நல்லுரை ஆற்றும் போதே விண்ணுலகம் நோக்கி உம் பயணம் கொண்டீர்!!
வல்லரசு 2020 ஒன்றே உம் கனவாய் கொண்டீர், உங்கள் கனவுகளில் எங்கள் பயணம்!  மரம் வளர்க்கும் ஆசை விதையை விதைத்து சென்றீர்! - இன்னும் முயல்கிறோம்!

இன்றைய தினத்தில் உங்கள் கனவை நினைவாக முயலும் எங்கள் முயற்சியே உங்களுக்கு நாங்கள் செலுத்தும் கலா(ம்) அஞ்சலி!!

-அஜய் ரிஹான்

கருத்துகள்