அக்ரஹாரத்து வீடு


நெடுசா வளந்த வேப்ப மரத்த ஒட்டி உன் வீடு
செவுரெல்லாம் கரையான் பூந்து விளையாடும்
நெளவுகாலு எல்லாம் மஞ்சளேறி கெடக்கும்
வாசலை ஒட்டி கழனி தொட்டி இருக்கும் - வீதியில
போற மாடெல்லலாம் நீ ஊத்துற தண்ணிய குடிக்க

நாகரீகம் எம்புட்டு தூரம் வளந்தாலும் இன்னும் உன்
ஊட்டுக்கு வந்து சேரலையே - பல்லுக்குச்சி வெச்சு தேச்சு
இன்னும் மரத்தோட உசுர வாங்குறியே - காலம்
நெறையா மாறி போச்சே உன்னோட பழக்க வழக்கம் மட்டும்
மாறலையே - மரமும் இப்போ பட்டு போச்சே

உனக்கு பெத்தவன் வெச்ச பேர் இருக்க பால்காரி தொடங்கி
கிராமத்து சனமெல்லாம் ஐயர் வூட்டம்மா என கூப்பிட
நீயோ அவளை அவள் சாதி சொல்லி உள்ளிருந்து கத்துவியே
இப்ப அவ கூட வந்து இருக்கா கூப்பிட தான் ஆளில்லை

வக்கத்து போனவ ஓன் வூட்டு பழசை வாங்க வந்து நிப்பா
நீயோ அவ வூட்டு பாத்திரம் கூட தீட்டுன்னு பொத்துன்னு போடுவ
அவளோ வயித்த நெனச்சு வாய மூடிக்கிட்டு போவா
உனக்கென்ன அவ்வளவு ரோஷமா - அவளும் இப்ப உன்ன
பாக்க வந்திருக்கா சோறு போடத்தான் வூட்டம்மா இங்கில்ல

ஊரு மக்க எல்லா கோலப்பொடி வெச்சு கோலம் போட
நீ மட்டும் அரிசி மாவை வெச்சு போடுறியே - உன் மனசு என்ன
அம்புட்டு பெருசா எறும்புக்கு இரக்கம் காட்ட - வூட்டு முன்னாடி
தினமும் காஞ்சு கெடக்கும் வத்தலும், வடகமும் - இப்போ
பொறுக்கி வைக்காம எங்க மறைஞ்சு போனியோ !

பொங்க சோறு நீயும் வெச்சா வாசனை புடிச்சு வூட்டு முன்ன
வரிசை கட்டி நிக்கும் சாமிக்கு கொஞ்சம் கூரை மேல
நிக்குற காக்கைக்கு கொஞ்சம் வெச்சு மனுஷனுக்கு
மீதிய கொடுத்து கொழந்த போல சிரிப்பியே - இப்ப பண்டிகை
வேற வந்திருக்கு - நீ மட்டும் எங்க போன ஒத்த வார்த்தை கூட சொல்லாம

வகை வகையா தூணியிருந்தும் நீ கட்டுற ஒம்பது கஜம் போல
காணலியே - வாசலுல கொடிக்கயிறு இருக்கையிலே வீட்டுக்குள்ள
மடியா நாலு பொடவை எப்பவும் காஞ்சிருக்கும் - கொழந்தகீது
தொட்டுருமோன்னு உனக்கும் எட்டாத ஒசரத்துல போட்டுருப்ப
அத எடுக்க உன்ன விட ஒசரமா கொடிக்கம்பு ஒன்னு  வெச்சு இருப்ப

 ஊருல வயசு பொண்ணுங்க போற தெருவுல நீ மட்டும் ரவிக்கை
போடாம போவியே - கன்னி பொண்ணுங்க கண்ணு பட்டு போச்சோ
பேரன் பேத்தி வந்த பெறவும் கொள்ளு பேரன் பேத்தி பாக்க குச்சி
புடிச்சு தெம்பா நின்னியே - அந்த பக்குவம் சொல்லி சமைச்சு போட
என்ன பெத்தவளுக்கு தெரியலையே - கொஞ்சமாவது சொல்லி தொலைச்சிருக்கலாமே கெழவி

அரக்கு போட்டு உந்தலை அரக்கிகளை அலசுவியே - குளிச்ச பொறவு
அதுக்கு பொகை போட்டு வாடுவியே - மிச்சம் வெச்ச சாம்புராணி இன்னும்
வீட்டுக்குள்ள மனக்குதடி - நீ சாமியறைக்கு வரதுக்குள்ள சாமியெல்லாம்
உன்ன பாக்க வந்து நிக்கும் பொக்க வாயில நீ சொல்லுற மந்திரம் கேக்க

வீட்டை கூட்டிகூட்டி தேஞ்சு போச்சு ஈக்கு மாத்து குச்சி - ஆனா
நீ மட்டும் ஓயாம பெருக்கிகிட்டு கெடக்கன்னு அது உன்ன பாத்து கேக்குது
கிழவி - குமுட்டி அடுப்புல தான் சமைச்சு வெப்ப அதுல கூட தாய்ப்பால்
வாசம் வீச வெப்ப - கரியெல்லாம் மூலையில குமிச்சி வெப்ப - அதுவும்
இப்ப கண்ணீர்விட்டு அழுகுது எடுத்து சமைக்க தான் நீயுமில்ல

உன் காலுல விழுந்து கும்பிட்டா சுருக்கு பையில எதையோ தேடுவியே
நெத்தியில விபூதி பூசி மிச்சத்த என் வாயில போடுவியே இப்போ பைய
இங்க வெச்சு நீ மட்டும் எங்க போய் தொலஞ்சியோ - காலையில ஏத்தி
வெச்ச வௌக்கு எரியுது - செவத்துல இருக்க சாமி கூட வாசலை பாத்து நிக்குது நீ திரும்ப வந்துருவன்னு - நீ சாமி கிட்ட போயிட்டன்னு வௌக்கு
உன் பக்கத்துல வந்துருச்சா !!

பாவி மக வெத்தலை கடையில நீ வெச்ச பாக்கி கேட்டு வந்து நிக்குறா கடன்காரி - உன் வெத்தலை பெட்டியில கணக்கா நீ விட்டு போன சில்லறை என்ன பாத்து சிரிக்குதடி - கடவாயில ஓரமா அடக்கி வெச்ச துண்டு புகையிலை, செக்க சிவந்த பல்லு  - கொதப்பிக்கிட்டே நீ பேசுற பேச்சை திரும்ப எப்ப கேக்க போறேனோ - பாவி பய நான் உன்ன கடைசியா பாக்க கூட கொடுத்து வைக்கலியே !!

நீ ஊத்துற அரை கிளாஸ் பாலுக்கு விசுவாசமாய் உன் விட்டு வாசலுல
கெடந்த நாயும் இப்ப கடைசி வரை வாலாட்டி வருது பாரு  பின்னாடி 
பஸ்ஸ விட்டு ரோட்டுல நீ நடந்தா உன்  முதுகு பின்னாடி மெதுவா நடந்து வரும்
பையிக்குள்ள கைய விட்டு ரொட்டி கட்ட நீ பிரிக்கையில உன் முன்னாடி
வாலாட்டி நிக்குமே - அது இனி யாரு மூஞ்சிய பாத்து நிக்கும்

சாயங்காலம் வீதியில போற மனுஷாள பாத்து உன் வீட்டு சொந்தம்
போல குசலம் விசாரிப்பியே - இப்போ மனுஷ சனம் வந்திருக்கு சேதி
கேக்க - நீ மட்டும் தூங்குறியே பேயாம - மரத்தடியில கயித்து கட்டிலுல ஒய்யாரமாய் நீ உக்காந்திருக்க - ஊரு கெழவிகளுக்குபஞ்சாயத்து செஞ்சியே இனி நாட்டாமை செய்ய ஆளில்லாமல் ஏங்கி  நிக்குதடி கயித்து கட்டில்

நெத்தியில பட்ட போட்டு எண்ணெய் வெச்சு குளிப்பாட்ட சொந்த பந்தமெல்லாம் சுத்தி நிக்குது - உன்ன சுட்டெரிக்க நெருப்பும் இப்போ
பயந்து நிக்கிது -  போக போற இடமெல்லாம் ஒனக்கு புதுசு தான்
போற வழியில ஒன்ன போல சாமி நெறையா நிக்குதான்னு பாத்துக்கோ - நீ சொன்ன கதை எல்லாம் கண்ணு முன்ன வந்து நிக்குதடி

பக்குவம் சொல்லவும் ஆளில்லை இனி இந்த வெத்தலை
கொட்டவும் நீ இல்ல - பொட்டக் காட்டுலயும் வாழ்ந்தவ இனி என்
வூட்டு போட்டோவுல மட்டும் தங்கப்போற -வாழ்க்கையை வாழ்ந்து
காமிச்ச நீ இனிமே வரலாறா நிக்க போற - நிலவுல நின்னு தெனமும் என்ன பாக்க போற - போய் வாடி என் "அக்ரஹாரத்து கெழவியே "

என்றேனும் ஒருநாள் நானும் அங்கு வருவேன் உன்னிடம் கதைகள் கேக்க - தயாராய் இரு !!

-அஜய் ரிஹான்  

கருத்துகள்