அவள் ஒரு தொடர் கதை



உன் நினைவுகள் இல்லா தனிமையில் தொலைந்து போக
இடமொன்று வேண்டும் - பொய்யாய் பேசி சிரிக்க ஒத்திகைகள் பார்த்துக்கொள்ள !!

ஒற்றை கயிற்றில்  சமமான நிலையில் நானும் என் நினைவுகளும்
வேகமாய் வீசும் உன் மூச்சுக் காற்றில் ஆடும் பொம்மலாட்ட
பொம்மைகளோ?

என் ரசனைகள் அனைத்தும் ஒற்றை நொடியில் தீர்ந்து போகாதோ
தினமும் நான் புலம்பித் தீர்க்க முடியாமல் நானும் தவித்துத் திரிய !!

சிணுங்கி சிணுங்கி ஓய்ந்து போன என் கைபேசி கூட இன்று நானில்லா 
நேரம் பார்த்து தற்கொலை  செய்து கொள்ள மௌனமாய் முடங்கி போனது
உன் சிணுங்கல்கள் அதில் இல்லாததால்!!

நிஜங்கள் என்ன மாயமோ ? என் கண்கள் கட்டி ஜாலம் செய்யும் கொடுமையோ
வாயில்லா குழந்தை போலே கதறி அழும் எந்தன் மெய்கள் என்ன பாவமோ!!

நிழல் மூடிக் கிடக்கும் எந்தன் ஆசைகள் எல்லாம் ஒளி காண ஏக்கம் தான்
ஒளிந்து கிடக்கும் உள்ளக்கதவில் இருளில் மூழ்கித் தொலைத்த என் கோடிக் கனவுகள்!!

மொழிவாய் குழந்தைகள் என் வார்த்தைகள் தினமொரு கவிதை சொல்லி என்னை கவிஞன் என்றது - வியந்தேன் நாளொன்று உன்னை மறந்து கிடந்தேன் பாவம் என் பெயர் சொல்லவும் வார்த்தையில்லையடி!!

ஆமாம் உன் கண்கள் தான் அழகென்று சொல்லித் திரிந்தேன் - இது
இறந்தகால - எதிர்கால - நிகழ்கால வாக்கியமன்றோ?!!

சொச்சம் சொல்லி முடிக்கும் முன்னே மூச்சு முட்டிப் போகிறேன் - மிச்சம்
சொல்லும் முன்னே மூர்ச்சையாகி போவேனோ  - வஞ்சனையில்லாமல்
உன்னை மட்டும் அழகென்ன படைத்தது எங்கே தொலைந்தானோ பிரம்மன்!!

உன் குரல் கேட்டு விடியாதோ என் காலை வேளை - நேரம் போக
போக என் கடிகாரத்தில் நொடிக்கும் நேரத்துக்கும் இடையே போராட்டம்
இரவும் என்னை சூழும் உந்தன் நினைவும் - தேய்பிறை எந்தன் உயிரோ ?!!

நினைவுகளை கொஞ்சம் அலை வரிசையாக்கி அனுப்பி வைக்கிறேன்
எந்நேரமும் நீ கேட்டு ரசிக்கும் பாடல்களில் என் ஞாபகம் உன்னில் எழ

உன் ஞாபகங்கள் இல்லாத என்னுடைய ஒரு நாள் அனுபவம் கொஞ்சம் கேள்!!

"நிறமில்லா பூக்கள் - அசையா மேகம் - ஓடா நேரம்
ஈரமில்லா என் இதழ்கள் - பூமியில் நரக பிம்பம்
ஈட்டி பாயும் நெஞ்சில் ரத்தம் சொட்டா நிலை
நேரம் தவறி துடிக்கும் என் இதயம்  - மௌனமாகிப்
போன என் நாய்க்குட்டி - வெப்பம் வீசும் என் காற்றாடி- மாறிப்
பின்னிக் கொள்ளும் என் சட்டை பொத்தான்கள் - காற்றின் 
வேகத்தில் பாயும் இரத்த ஓட்டம் - நகரா மிதிவண்டி - மெதுவாய் 
சுழலும் என் உலகம் "

தேக்கி வைத்த நேசம் யாவும் என் சொல்லின் மூலம் உன்னில் பாயும் !
உன் புன்னகை ஒன்றே நான் விரும்பி வாங்கும் யாசகம் !!

சகியே!! வந்தால் உனை புத்தகமாய் வாசிப்பேன் - விதியால்
விலகிச் சென்றால் மூச்சுக்  காற்றாய் ஸ்வாசிப்பேன் !!

மாறா நிலை என் இதயம் அதில் நீ தோழியென்றாலும் இல்லை என்னில்
சரி பாதி நீயானாலும் என்றும்  "நீ ஒரு தொடர் கதையே"

" I always have many roads to travel, but I take the one which leads to you"

-அஜய் ரிஹான்

கருத்துகள்