யாவரும் மனிதரே - உடலில் அவனும், உயிரில் அவளும்


" யாதும் ஊரே யாவரும் கேளீர் " இந்த வாக்கியம் வெறும் ஏட்டிலும், பிரச்சார
சுவரொட்டிகளில் மட்டுமே எழுத/ பிரசுரிக்க கூடியதாக போனது. மாற்றம்
அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனோபாவம் மனித மனங்களில் விதைக்கப்படாதது வேதனையான ஒன்றே. மனிதனை மனிதன் வேற்றுமைப்படுத்தி பார்க்கும் கொடுமை உணர்வு ரீதியான ஒரு மரணமே.

இந்த உலகை படைத்தவன் தான் உன்னையும், என்னையும் அவர்களையும் படைத்தான். அவன் படைத்தலில் தவறேதுமில்லை அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரியாத மனிதனிடம் தான் பிழையே.  

"சிவ சக்தி நீயோ சிவனில் சரி பாதி மீதியோ
ரௌத்திரம் பழகி உலவும் நாண சிலையோ "

 பேடிகள், ஆரிய கூத்தாடிகள், இன்னும் சில பெயர்கள் தாங்கி வரலாறுகள் பல பதிவு தாங்கி நின்றாலும் கீதை ஏற்கும் மனது பாவம் இந்த பேதைகளை ஏற்றுக்கொள்ள இன்றுவரை பக்குவமில்லாமல் போனது வேதனை தான். மாய மோகினி என்பார், அர்த்தநாரீஸ்வரர் என்பார், கர்பகிரஹம் வாசம் செய்யும் கடவுளென்றால் இருகரம் கூப்பி வந்தனம் செய்யும் அதே மனிதன் தான் இவர்களை ஏசிப் பேசும் அரக்க வம்சம் குலத்தோன்றல்கள்.

" வந்தனம் செய்யும் மனமே கடவுளை நித்தமும் தொழுதிடும் 
குணமே கருவறை வாசம் தாண்டி உணர்வு பிழை வரம் 
வாங்கி நிற்கும் என்னை ஏளனம் செய்வது தகுமோ ? "

ஆண்மைக்குள்ளே புகும் பெண்மையும், பெண்மைக்குள்ளே நுழையும் ஆண்மையும் மாற்றம் காண்பது  உணர்வுகள் மட்டுமே உயிரல்லவே. நீயும் ஒரு பெண்ணல்லவோ உன் மகன் ஹார்மோன்கள் மாறுபாட்டால் செய்கைகள் மாறும் போதும், நீயும் ஒரு ஆணல்லவோ உன் மகள் நாணம் விட்டொழிந்து வீரம் வெடிக்கும் போதும் அரவணைத்தும், அரண் அமைத்தும் நின்றிருக்க வேண்டாமா ?

" கருவாகி உருவாகி வளர் பிறையாகி நிறை குடமாகி உன்னால் உயிராகி யாதுமாகி நின்ற அவன்/அவள் இன்று கேள்விக்குறியாகி "


உருவங்கள் மாறும், உணர்வுகள் மாறும், பால் இனங்கள் மாறும், உடைகள் மாறும், உரிமைகள் மாறும், நளினங்கள் கூடும், நடை பாவனை வேறுபடும் குரல்கள் மாறும் - இதயமும் ஈரமும் மாறாது.

தாய் நாட்டில் இருந்து விரட்டப்பட்ட அகதிகள் போல தான் நீ விரட்டிய உன் மகன்/மகளின் நிலை இந்த சமூகத்தில். தனக்கென ஒரு அடையாளம் தேடித் திரிவான். ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது தன்னை ஆதரிக்க ஒரு இனம் இல்லாமல் இந்த உலகமே வேற்றுக்கிரகமாய் மாறிப் போகும்.

" வேசியென்பான் அவளை வார்த்தைகள் தீட்டி ஈட்டி எறிவான் அவன் இதயத்தில் - திரு நங்கை என்றாலும் உள்ளம் உண்டென்று பாராது
உடல் தீண்டும் காமுகனும் இன்னும் திரியக் காண்கிறேன் நான்
"


கொல்லப்படும் உரிமைகள், உணர்வுகள். வீதியில் நடந்து சென்றால் காது கூசும் வார்த்தைகள் பேசும் மிருகங்கள் திரியும், ஓரமாய் ஒதுங்கி நின்றால் உடல் உரசி மீதமுள்ள உயிரை கொள்ளும் நரமாமிசம் தின்னும் ஓநாய்கள். முறையிட சென்றால் முறையில்லா பார்வை பார்க்கும் காவல்கண்கள்.

" நானும் கண்ணகி குலமே - என்னை தீண்டும் உன்னையும், உடல் தீண்டும் உன் கண்ணையும் சுட்டெரிக்க மாட்டேனோ "

அவசர நிலையென்றால் தங்களுக்கென்று ஒரு கழிவறை கிடையாது, சுயமாய் ஒரு தொழில் செய்தாலும் கேவலம் பேசிச் செல்லும் இந்த சமூகமும், தான் தான் சமூகம் என சொல்லிக்  கொள்ளும் மனிதனும். அவலங்களை மட்டுமே தினம் தினம் சகித்துக்கொண்டும், அதனை எதிர்த்து போராடிக்கொண்டும், தன் நிலை எண்ணி மனதளவில் நொந்து கொண்டும்
நாட்களை கடத்துவது நரக கடலில் தனியாய் நீந்துவது போல் அல்லவா?

" இல்லை எங்களுக்கென்று ஏதும் இல்லை - கழி
வறை தொடங்கி மரியாதை வரை ஏதும் இல்லை
இந்த சமூகத்தில் "


நடந்து செல்லும் பாதையில் கடந்து செல்லும் மனிதர்கள் எங்களுக்கும் ஆசை உண்டென்பதை ஏற்க மறுக்கும் அந்த நிமிடங்கள் மரணத்தின் உச்சம். கிளிகளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆசை தான் குடும்பமாய் வாழ, எங்களுக்கும் புன்னகைக்க தெரியும், எங்கள் கண்களிலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை - அதை துடைக்கவோ, ஏன் என்று கேட்கவோ ஆள் இல்லை இந்த பூமியில்.

" புன்னகை மறந்த இதழ்களும், அழுதே வறண்ட இரு கண்கள் பாலைவனமும் - தனித் தீவின் தனிமையில் தவிக்கும் ஓர் இனமும் "

பிச்சை எடுக்கவோ, மானம் விற்று தொழில் செய்யவோ விரும்பி எவரும் வருவதில்லை, அரவணைக்க தவறிய அன்னையும் தந்தையும், அன்பு காட்டாத உடன் பிறப்பு, போகும் இடமெல்லாம் இழிவு பேசி ஏளனம் செய்யும் வேற்றுகிரகவாசி மனிதனும், சந்தர்ப்பம் பார்த்து உணர்வோடு விளையாடி ஈனத் தொழிலில் அவர்களை உந்தித் தள்ளிச் செல்லும் பிறவிகள், இவைகளோடு கடவுளின் சதிச் செயல்களும் அங்குமிங்கும்.

"மாற்றத்தின் பிறப்பிடம் வீடு", எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும், மறு கணம் அதை மறந்து திரிவது மனித இயல்பே. "திருநங்கை" - உன்னை போல் என்னை போல் யாவரும் மனிதரே. அரவணைக்க மனமில்லாமல் போனாலும் அவமானப்படுத்தவோ, அசிங்கமாய் பேசவோ உனக்கோ எனக்கோ உரிமையில்லை.

"   வளர்ந்தென்னை ஆட்கொள்ளும் உணர்வுகளே
உலகம் என்னை இழிவென்றும், தூக்கி எரியும் கழிவென்றும் பாரும்
நிலையொன்று மாறாதோ - இல்லை நீயேனும் கருணையாய்
எமக்கென்று புதியதொரு உலகம் படைத்திடுவாயோ பராசக்தி "

 
-அஜய் ரிஹான்

கருத்துகள்