குருதிப் புனல் - அத்தியாயம் 9



ஏதோ ஒன்றை கண்டு பிடித்தவளாய் ஸ்ரேயா கத்த முயற்சிக்க, அனன்யாவும் ஸ்ரேயாவும் ஒரே நேரத்தில் அவன் பெயர் சூர்யா என சொல்ல, அவர்கள் சொல்லி முடிக்கவும், இவள் அதே பெயரை சொல்ல வாயெடுக்கவும் சரியாக இருந்தது. இங்கு என்ன நடக்கிறது என்பதே அறியாமல் அந்த பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

சரி இப்போ தான் அவன் பெயரை கண்டுபுடிச்சுட்டல , என்ன பண்ண போற ? அவனை உன் நண்பனா ஏத்துக்க போறியா இல்லை இப்டியே விட போறியா என கேட்டாள் ஸ்ரேயா.

அப்போது அங்கு வந்த ஜெஸ்ஸி என்ன பண்றீங்க? எப்படி இருந்துச்சு இந்த ட்ரிப் ? என அவர்களிடம் கேக்க, அனன்யா இதே மாதிரி ஒவ்வொரு செமஸ்டர்க்கும் வந்தா நல்லாருக்கும் மேடம் என சொல்லி சிரிக்க, ஆமாம், நம்ம கல்லூரில இப்படி அனுப்புறதே பெரிய விஷயம், இதுல உனக்கு செமெஸ்டர்க்கு செமஸ்டர் அனுப்புவாங்களாக்கும் ஆசைய பாரு என நக்கலாய் சொல்ல, இல்லை மேடம் இந்த ட்ரிப் ரொம்ப ஜாலியா இருந்துச்சு திரும்ப நாளைல இருந்து காலேஜ், படிப்புன்னு ஒரு மெஷின் வாழ்க்கை மேடம் அதான் சொன்னேன்.

 அதெல்லாம் சரி தான் ஆனா நாம வர போற நாப்பது அம்பது வருஷம் நிம்மதியாவும், சந்தோஷமாவும் வாழணும்ன்னா இந்த மூணு வருஷம் நல்லா படிக்கணும்ல. அதுனால இந்த ட்ரிப் மாதிரியே அதையும் சந்தோஷமா படிங்க, காலையில நாம நேரமே சென்னை சென்ட்ரல் போயிடுவோம், சீக்கிரமா தூங்குங்க, அங்க நம்ம காலேஜ் பஸ் வந்திடும். நமக்கு நாளைக்கு காலேஜ் இல்லை, புதன்கிழமை யாரும் லீவு போடாம வந்திரனும். எல்லார்கிட்டயும் சொல்லுங்க, என அக்கறையுடனும், அனுபவத்துடனும் கருத்தை சொல்லி சென்றார் ஜெஸ்ஸி.

ப்ரியா தான் தோழிகளிடம் நாம ஜாலியா பேசுனா மேடம் அதை சீரியசான டாப்பிக்கா மாத்தீட்டாங்களே? அவங்க சொன்ன விஷயம் சரி தானே, படிக்கிற வயசுல படிக்காம விட்டுட்டு நாளைக்கு கஷ்டப்பட போறது நாம தானே சொல்லு, சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்துல சந்தோஷமா இருக்கனும், படிக்கிற அப்போ படிச்சுடனும் என அனன்யா சொல்லிக் கொண்டே போக ஸ்ரேயா அவளை "ஐயோ சாமி நீ வேற பாடம் நடத்தாத" என சொல்லி நிறுத்தினாள்.

அமைதியாய் போய்க்கொண்டிருந்த இரவு பிரயாணத்தில் அனன்யாவிடம் ஸ்ரேயா "நீ உனக்கு எப்படிப்பட்ட கணவன் வரணுமுன்னு கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்ன்னு சொன்னல்ல இப்போ சொல்லு என கேக்க இதுவரை வராத வெட்கத்தை வரவைக்க முயற்சித்தாள்

" கண்டவுடன் காதல் கொள்ளும் கள்வன் வேண்டாம்
கண்ணுக்குள் ஒளிந்து கொள்ளும் மாயவன் வேண்டாம்
இரவை களவாடி இச்சைகள் கொள்ளும் இம்சைகள் வேண்டாம்
உறுதியாய் சாய்ந்திட தின் தோள் வேண்டும்
மறு மகனாய் மாறி என் தாய் பிள்ளையாகிட வேண்டும்
கொள்ளை கொள்ளும் அழகு அகத்தில் வேண்டும்
மணமான மறுநொடி மன்னவன் தோள் சாய வேண்டும் "

இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரை தூக்க நிலையில் மூழ்கி இருந்தாள் ஸ்ரேயா, அவளை தலையணையால் அடித்து எழுப்பி, ஏண்டி என்ன சொல்ல சொல்லிட்டு நீ தூங்கிட்டு இருக்கியா? போடி என முகத்தை திருப்பிக் கொண்டாள் அனன்யா. ஆமாம் உன்ன சொல்ல சொன்னேன் பாரு என்ன சொல்லணும்டி , இப்படி இப்படி, அப்படி அப்படி சொல்லுவன்னு பாத்தா நீ பெரிய வைரமுத்து மாதிரி கவிதையா சொல்லிக்கிட்டு இருக்க, அதான் தூங்கிட்டேண்டி என்றாள்.

ரயில் சென்னையை அடைய இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது. அனைவரும் சுற்றித் திரிந்த களைப்பில் உறங்கிக்கொண்டிருக்க அனன்யா மட்டும் அவளது தோள் பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ஆம்...அந்த செய்தித்தாள் தான், அவளுக்குள் அவள் நல்ல, தீய எண்ணங்கள் உரையாடிக்கொண்டது.

நல்லது: ஒரு பொண்ண அவன் இப்படி பண்ணிட்டாங்கற கோவம் இல்ல இது, ஒரு தப்பு, அதை செஞ்சிட்டு சுதந்திரமா எங்கயோ இன்னும் சுத்திக்கிட்டு இருக்கான்.தண்டனைகளும், சட்டங்களும் இன்னும் அமைதியா தானே இருக்கு.

தீயது: மத்தவன் என்ன பண்ண நமக்கு என்ன? நம்மள சுத்தி இருக்குற பிரச்சனைகளை பாக்கவே நமக்கு நேரமுமில்லை, அதுக்கான தைரியமும் இல்ல இதுல நீ இங்க நடக்குற தப்ப தட்டி கேக்கவா போற? அமைதியா தூங்கு.

நல்லது: தப்பு எங்க நடந்தா என்ன? அதை தட்டி கேக்க மனசு இருந்தா போதும். நடந்து போற பாதை குப்பையா இருக்குனு தினமும் சொல்லிக்கிட்டு இருக்குறத விட அதுல இறங்கி சுத்தம் செய்றது நல்லது தானே?

தீயது: மொதல்ல நீ ஒரு பொண்ணு, உன்கிட்ட ஒரு அதிகாரமும் இல்ல. இதுல நீ நாட்டை  திருத்த கிளம்பிட்டியா? மனசு இருந்தா பத்தாது, எது நடந்தாலும், என்ன நடந்தாலும் நாம ஆரம்பிச்ச ஒரு விஷயத்துல தொடர்ந்து போராடுற சத்ரிய குணம் வேணும். சும்மா இப்படி செய்தித்தாள பாத்துட்டு புலம்பக்கூடாது.

அனன்யாவிற்கு இந்த நல்லது, தீயதுக்கான உரையாடலில் இருந்து இரண்டு விஷயம் புலப்பட்டது. ஒன்று அதிகாரமின்மை, பெண் என்ற தனது நிலைப்பாடு. இதற்கிடையில் மனதில் ஒரு சஞ்சலம், இந்த பயணமும், புதிய சந்திப்பும் அமைந்தது ஏன்?  "நம்ம வாழ்க்கைல எதிர்பாராம நடக்குற ஒரு சில விஷயங்கள் நாம பயணிக்கிறப் பாதையோட திசையை கூட மாத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கு". எதுவா இருந்தாலும் நாம எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவாவும் அதுல உறுதியாவும் இருக்கனும் எனஅனன்யா நினைத்துக்கொண்டிருக்கும் போது எதிர் திசையில் இருந்து வந்த ரயிலின் சத்தம் அவளது எண்ண ஓட்டத்தை கலைத்தது.

அதிகாலை 4 .30 மணி, ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது.
அங்கிருந்து அவர்களை கல்லூரிக்கு கூட்டிச் செல்ல பேருந்து நின்று கொண்டிருந்தது. என்னடா இது ஜாலியா ஒரு ட்ரிப் போயிட்டு வந்து திரும்ப இந்த மூஞ்சில முழிக்கணுமா? என புலம்பிக்கொண்டே வந்தான் ஜீவா. பின்னாடி இருந்து ஒரு குரல் "அது உன் விதி தம்பி வேற வழி இல்லை" யாரென்று திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி அது தனது நண்பர்களுடையது அல்ல, அது ப்ரோபஸ்சர் அர்ஜுன்.

அதிகாலை என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகமில்லை என்பதால் அனைவரும் விரைவில் கல்லூரியை வந்தடைந்தனர்.  ப்ரியாவும், அனன்யாவும் போகும் வழியிலேயே இறங்கி கொண்டனர். தோழிகளுக்கு கை அசைத்து விட்டு ப்ரியாவிடம், வீட்டுக்கு வந்திட்டு போடி அம்மா கேப்பாங்க, என்ன சொல்ற என்றாள் அம்மு. சரிடி, மணி இப்போ தானே 5 .15 ஆகுது, வந்துட்டு அப்டியே ஒரு காபி குடிச்சுட்டு போறேன். என்ன காபி தருவியா? என பேசிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டை அடைந்ததும் காலிங் பெல்லை ஓயாது அடிக்க, ஏண்டி அம்மா தூங்கிட்டு இருப்பாங்க, ஏன் அவங்கள பயமுறுத்துற மாதிரி பெல்லடிக்குற என்ற ப்ரியாவிடம் பொண்ணு சுற்றுலா போயிட்டு வந்திருக்கேன், இப்போ பாரு நான் மூணு எண்ணுறதுக்குள்ள வசந்தி கதவை திறக்கும் பாரு என சொல்லி எண்ணத் தொடங்கி இரண்டு சொல்வதற்குள் கதவு திறக்கப்பட்டது.

அம்மா.........என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள். என்னம்மா மூணு நாளா ஜாலியா இருந்தியா என்ன பாக்காம? என கேட்ட அனன்யாவை செல்லமாய் பார்த்து "ஆமா, ரொம்பவே ஜாலி தான் வாடி உள்ள, வாம்மா பிரியா" என கூட்டிச் சென்றாள் வசந்தி. ப்ரியா சோபாவில் உட்கார்ந்து டிவி பார்க்க சிறிது நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்தாள் அன்னயா.

வசந்தி இருவருக்கும் கையில் காபியோடு, எம்மா நீ டிரஸ் மாத்திக்கலயா? இங்கயே சாப்பிட்டு காலேஜ் போறது தானே என்றாள். ஆமா இன்னிக்கு காலேஜ் வேற போகணுமா? என அலுத்துக்கொண்டனர் ப்ரியாவும் அம்முவும்.

என்னடி ரெண்டு பேரும் ஒண்ணுமே பேசாம உக்காந்து இருக்கீங்க?, ட்ரிப் எப்படி இருந்துச்சு?, எதாவது புதுசா பாத்தீங்களா? என அடுக்கடுக்காய் தன் மடியில் படுத்திருந்த அம்முவின் தலையை கோதிக்கொண்டே கேட்டாள் வசந்தி. நான் ஒன்னும் புதுசா பாக்கல ஆனா ப்ரியா என ஆரம்பித்த அம்முவின் வாயை ஓடி வந்து பொத்தினாள் ப்ரியா.

என்ன விஷயம்? ரெண்டு பேரும் பண்றத பாத்தா....சரி இல்லையே, இவ வாலு, அவ சொல்றத கேக்க மாட்டேன் நீ சொல்லு ப்ரியா என அவள் பக்கம் திரும்பினாள் வசந்தி. இல்லம்மா, நான் உங்க கிட்ட எதையும் மறைச்சது இல்ல, இந்த ட்ரிப் போன அப்போ என் கூட படிக்கிற பையன் என்ன காதலிக்குறதா சொன்னான், நான் அவன்கிட்ட பேசினேன், என்னோட வீட்ல சம்மதிச்சா மட்டுமே இதுல எனக்கும் சம்மதமுன்னு சொல்லிட்டேன்மா என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

சந்தோசம் தான், இப்போ என்கிட்டே  உண்மையை சொன்ன மாதிரி உன்னோட பெத்தவங்க கிட்டயும் சொல்லுமா ஏன்னா.... நம்மள உண்மையா நேசிக்கிறவங்க கிட்ட நாம எப்போவும் உண்மையா இருந்தா தான் நாம உண்மையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம்ங்கிற ஒரு சந்தோசம் கிடைக்கும் என்றாள் வசந்தி. அதில் வாழ்க்கையை பத்தின யதார்த்தம் ஒளிந்திருந்ததையும், அது தனக்கும் பொருந்தும் என சொல்லாமல் சொன்ன வசந்தியை அன்பாய் பார்த்தாள் அம்மு.


சரிம்மா நான் அவங்ககிட்ட கண்டிப்பா பேசுறேன், அம்மு நீயும் சொல்லிடு என சொல்லி கண் சிமிட்டினாள் ப்ரியா, உடனே அவளிடம் "உனக்கு டைம் ஆச்சு நீ கிளம்பு, காலேஜ் போற அப்போ சொல்லு வரேன்" என அவளை விரட்டினாள் அனன்யா. வசந்தியிடம் "அம்மா, இவளை என்னனு கேளுங்க, விட்றாதீங்க......"என சொல்லிக்கொண்டே தனது பைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் ப்ரியா.

என்ன அம்மு? உனக்கும் யாரையாவது புடிச்சு இருக்கா? என கேட்டவளிடம் இல்லம்மா, எனக்கு ஒருத்தரை புடிச்சு இருந்தா நான் மொதல்ல சொல்ற ஆள் நீயாதான் இருப்பம்மா, நீ இந்த கேள்வியை சந்தேகமா கேக்கலைங்கிறதும் தெரியும், செலவு வைக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டாளோன்னு நக்கலா கேக்கறங்கிறதும் தெரியும் அம்மா.

அவளுக்காக வாங்கி வந்த அந்த புடவையை கொடுத்தாள், புடிச்சு இருக்காம்மா? எனக் கேட்ட தன் செல்ல மகளை கட்டியணைத்து முத்தமிட்டாள் வசந்தி.

நேரமாவது கூட தெரியாமல் வசந்தியிடம் அவள் தான் ரயில் நிலையத்தில் அவனை கண்டது முதல் அவன் பெயரை கண்டுபிடிக்க கூறிய வரிகள் வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

உங்களுக்கும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

சூர்யா.....வருவான் !!
- குருதிப் புனல் - அத்தியாயம் 8

கருத்துகள்