அந்தப்புரம்


வெந்தீயில் உருகுமொரு யாக்கை - தீரா
வெள்ளமென உள்ளூர பாயுமொரு வேட்கை!

அள்ளி அணைக்கும் தூரத்தில் நீயிருந்தும்
அச்சமென ஐவிரலும் தத்தளித்து தீக்குளிக்கும்

கண்ணுக்குள் கலவரமொன்று காட்சியாய் ஓடுதடி!
கனவெல்லாம் இரவை தின்று பகலையும் கேட்குதடி!!

மிருகமென்று ஆட்டிப் படைக்க ஒரு தலை காமம் - அடங்காது
வேண்டும் வேண்டுமென பத்துத் தலை வெடித்து எழ!

உச்சந் தலையில் முகாமிட்டு போர் யுக்திகள் தொடங்கிடவா?
முத்தச் சத்தம் முரசொலிக்க முதலில் தோற்பது ஆடையோ?

ஓடும் பாலாடை மறைக்க மேலாடை என்ன காவலோ?
கள்வன் நானதை மீட்டெடுக்க பேராவலோ?

நாணம் விடை கொடுக்க வீரம் முன்னேறி படையெடுக்க - மீளா
தாகம் விரகமென பரவ, மோக முள் தேகம் தைக்காதோ?

மஞ்சம் வந்த மங்கைக்கு பாட்டி சொன்ன கதைகள் எதுக்கடி?
மன்னவன் சொல்லும் வித்தைகள் கேளடி - ஜாலங்கள் பல கோடி!

எய்தவன் நானிருக்க, உலகம் இதுவோ நீ மறந்திருக்க!
எத்துணை கேடயம் தாங்குமோ முழக்கத்தை - வாகை சூடவே!!

அரியணை விரும்பினும் செங்கோல் கேட்பினும் ராஜனும்
அடிமை சாசனம் சூடினும் இங்கே ஆட்சி புரிவது நீயே!

தனியா பசியில் யாசகம் நியாயமோ - விருந்தில் வெட்கம்
விடுதலை கேட்பின் புலன்கள் உடைத்து கோல் உயர்த்து!

இயந்திர வேளையில் இயக்கம் நிற்பினும் ஆசை முத்தங்களை
இடைவெளியில் துணை அனுப்பி வைப்பேன் கன்னத்தில்!

திமிறும் சதைகள் கட்டி நிறுத்து, காதல் கடந்த புனிதமென்றே
திறந்து நடக்கும் வினோத லீலை உச்சம் எட்டிய பின்!

சொல்லில் அடங்கா இரவுக் கவிதைகள் எல்லாம்
செயலில் எழுதி வைப்போம் - ரகசியமாய்!!

போதவில்லை நேரம், எட்டிப் பார்க்கும் நிலவையும்
போர்வைக்குள்ளே கட்டிப்போட்டு - மயங்கிப் போகட்டும்!

"இதழ் சுளிப்பாய் முத்தம் கேட்பேன்
இமை திறப்பாய் இறுக்கம் கேட்பேன்
தனிமையென்பாய் உன் ஆசை கேட்பேன்
தூக்கமென்பாய் உன் போர்வைக்குள்ளே
உலகம் கேட்பேன் - நீயும் நானும் மட்டும்"


ரசனைகள் அதிகம் ஆனால் வார்த்தைகளோ கொஞ்சம்
மிச்சம் வைக்கிறேன் உனக்காக - என்னையும் ரசனைகளையும்!!

- அஜய் ரிஹான்

கருத்துகள்