வசியக்காரி



தீரா கனவின் தாகமெல்லாம் நிஜமென
உருவெடுத்து  தீயென தேகமெல்லாம்
தகதகக்கும் வெப்பம் கூட்டி நில்லாது
ஓடும் நிலையில் என்னை சாய்க்கும்
உன் இரு விழிகள் கண்டேன்!

மெல்ல நகரும் நீரோடை நெற்றியில்
செந்நிற சந்திரன் முழு பிறையென
பருவமெய்தி நிற்க மூர்ச்சையுற்ற மீனாய்
நானானேன் சரண் நீயென்று - அந்தம்
காண்பேனோ நின் அணி கலைந்து?

வளை நாண் புருவம் வியங்கோள்
குறியென் மார் ஏண் உடைத்து கொற்றம்
காண்பது அழகே - பொறை கன்னம்
தீண்டி நீ சிணுங்கும் ஒலியில் களி
கொள்ள மாட்டேனோ கண்ணம்மா?

நின் யெளவனம் யாழின்  இசையோ
மீட்டி மயங்கிடும் வித்தகன் நானோ?
உயிர் கொண்டெழும் (வி)சித்திரமே
காரிகையே ! நித்தம் நின் வளைவுகளில்
வாழ்ந்திடவோ ? சாத்தியமோ?

சங்கத் தமிழ் சுவையோ உன் இதழ்கள்
தீரா அமுதம் கசியக் காண்கிறேன்
பருகிச் சுவைத்திட காணிக்கை உயி
ரெனினும் சித்தமே - இடையினை சுற்றும்
என் மூச்சுக்காற்றிடம் சொல்வாயோ?

முற்றிலுமாய் தொலைத்தேன் என்னையே
உன்னிடம் ஒரு விழி பார்வையில்.!

வசியக்காரி - யாரோ நீ?

- அஜய் ரிஹான்

ஏண்* = வலிமை
வியங்கோள்* = ஏவல்
கொற்றம்*  = வெற்றி
பொறை* = மலை

கருத்துகள்

கருத்துரையிடுக